ஞாயிறு, 9 மார்ச், 2014

தனுசுவின் கவிதைகள்....திருந்துங்கடா சாமிகளா!!!!!


சகோதரர் கவிஞர் தனுசுவின் கவிதைகளுள் ஒன்று இங்கு... புதுக்கவிதையிலும் புதுமை செய்திருக்கிறார்... இது வரவேற்க வேண்டிய, மிக அருமையான முயற்சி!..நான் கண்டுபிடித்துவிட்டேன்!!.. நீங்க?!!!!!




ஒரு கவிதை எழுத
கரு தேடினேன்
நிமிராத உலகத்தால்
கொட்டிக் கிடந்தது தெருமுனையில்

தெருமுனையில்
கொடிகாத்த குமரன் சிலையடியில்
குடி காத்த இளங்குமரன்
குப்புறக்கிடந்தான்

குப்புறக்கிடந்து வாதம் கண்டிருந்த
ஜாதி மத பேதம்
நிமிர்ந்து
முச்சந்தியில் முழுமையடைந்திருந்தது
கட்சி எனும் பெயரில்

பெயரில் ஆதியும்
உழைப்பில் வியர்வையும்
தன்னகத்தே கொண்ட தமிழன்
வந்தாரை வரவேற்று
தன் மானம் விற்று
இன்று வரிசையில் வருகிறான்
இலவசம் வாங்க கையேந்தி

கையேந்தி வரும் கரைவேட்டி
கையூட்டு தருகிறான் ஊரைக்கூட்டி
அவனே
துட்டடித்து சாய்த்த துரைமார் முன்
தன் கொட்டடித்து நடத்துகிறான்
கருவூலத்தில் ராஜகளவு

ராஜகளவு செய்கிறான் கால்வாய் ஆறு ஏரி
அதில்
கட்டிடம் கிளப்புகிறான் புது நகராய் மாற்றி
ஆனால்
மழை நீரை சேகரிக்க
மும்மாரி அழைக்கிறான்
தானே
நிலத்தடி நீர் காக்கும்
ஐயானாராய் நடிக்கிறான்

நடிக்கிறான் கலைஞன்
என்பதை மறந்து
அவனை வணங்கி
படைக்கிறான் தினமும் பால்குளியல்
அவன்
திரையில் தோற்றால்
தாய் பிள்ளை துறந்து
நிஜத்தில் குளிக்கிறான் இவனோ தீக்குளியல்

தீக்குளியல் போல்
பெரும் காமத்தீ விழியில் சிக்கி
தினமும்
சாலையைக் கடக்கிறாள் பெண்ணினத்தில்
அவளுக்கு
நம்பிக்கை சிதையுது
நட்பாய் நினைத்த ஆணினத்தில்

ஆணினத்தில் ஏனடா இத்தனை அசிங்கம்
அசிங்கம் மறக்குது தான் எனும் ஆணவம்
ஆணவத்தில் நிறையுது அதிகாரம்
அதிகாரம் செய்யுது அக்கிரமம்
அக்கிரமம் அடையுது உக்கிரம்
உக்கிரம் அடைந்துவிட்டான் மனிதன்

மனிதன் இன்று
மனிதம் மறந்து
மதியும் இழந்து
கச்சை உதறி
பச்சை மேய
பட்டியைவிட்டு
மேய்சல் நோக்கும்
இந்த மானிடன் எனும்
செம்பளி ஆடுகளின்
கரும்புள்ளி மாறாதா
என்றும்
நாய் வால் நிமிராதா

-தனுசு-

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

5 கருத்துகள்:

  1. சரியான சாடல்...

    கவிஞர் திரு. தனுசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. என்றும்
    நாய் வால் நிமிராதா........!

    நாய் வாலை நிமிர்த்தமுடியுமா...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியவில்லை தான் , முயலாமலேயே முற்றுப்புள்ளி வைப்பது தான் வருத்தமாக இருக்கிறது

      நீக்கு
  3. யாருமே கண்டுபிடிக்கலையே :)))))!!!!.. புதுக்கவிதையையே 'அந்தாதி'யாக வடித்திருக்கிறார் சகோதரர் தனுசு!..மிகப் புதுமையான முயற்சி!..வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு