திங்கள், 28 அக்டோபர், 2013

MINI STORIES...UNGALIN NANBAN..சின்னஞ்சிறு கதைகள்...உங்களின் நண்பன்


அது ஒரு தொழிற்சாலை..

சில நூறு நபர்கள் மட்டுமே பணிபுரிந்தார்கள். ஆனால் அவர்களது வேலைத் திறமையின் காரணமாக, அந்தத் தொழிற்சாலைக்கு ஆர்டர்கள் குவிந்தன. தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு அருமையான தொழிற்கூடமாக அது திகழ்ந்தது.

தொழிற்சாலையின் அதிபர்.. தொழிலை விரிவு படுத்துவதற்காக சுற்றுப் பயணம் புறப்படத் தீர்மானித்தார்..தொழிற்சாலையை, தொழிலாளர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்.

திரும்பியதும்,  அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது..

 திடீரென்று ஆர்டர்கள்  குறைந்திருந்தன. தரம், மற்ற விஷயங்களில் எந்த மாற்றமும் இல்லை. போட்டித் தொழிற்கூடங்கள், தரத்தில் போட்டியிட முடியவில்லை. ஆயினும் அங்கு ஆர்டர்கள் குவிந்தன...

தொழிற்கூடத்தின் அதிபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். காரணம் தேடினார். சில காலமாக, கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் சரியாக டெலிவரி செய்யப்படாதது தான் காரணம் என்று தெரிந்து கொண்டார்.

அவருக்குப் பேராச்சரியம்.. என்ன ஆச்சு தொழிலாளர்களுக்கு.. ஏதாவது பிரச்னை அல்லது குறையா.. ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பித்தார். காரணம் பளிச்சென்று புரிந்தது..

ஒவ்வொருவரிடமும் பெரிய புகார் பட்டியல்... என் திறமையை இவர் மதிக்கவில்லை. நான் முன்னேறக் கூடாதென திட்டமிட்டு வேலை செய்கிறார்...மட்டம் தட்டுகிறார்.. அவர் என்னைப் பற்றி துஷ்பிரசாரம் செய்கிறார்.' இப்படி நீண்டது பட்டியல்..

ஒரு அதிர்ச்சி வைத்தியம் தரத் தீர்மானித்தார் தொழிற்கூடத்தின் அதிபர்.

ஒரு நாள், தொழிலாளர்கள், தொழிற்கூடத்தின் வாசலில் ஒரு பெரிய அறிவிப்புப் பலகையைப் பார்த்தனர்..

'உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்த மிகக் கொடுமையான எதிரி இன்று மறைந்து விட்டார்.. தொழிற்கூடத்தின் உடற்பயிற்சி மையத்தில், அவரைக் காணலாம்..'

ஜிம்மை நோக்கி முண்டியடித்தது தொழிலாளர் கூட்டம்.. ஒருவருக்கொருவர் காரசாரமான உரையாடலில் ஈடுபட்டனர். சிலர், 'மலர் வளையம் கூட வைக்கக் கூடாது.. இவரெல்லாம் மரியாதைக்குரியவரல்ல..' என்பதாக மனிதநேயமில்லாமல் கூட பேசத் தலைப்பட்டனர். 

ஆனால், ஜிம்மின் உள்ளே நுழைந்து வந்தவர் யார் முகத்திலும் ஈயாடவில்லை. அதிர்ச்சி நிரம்பிய முகத்தோடு அவரவர் இடத்திற்குச் சென்ற‌னர். யாருடனும் பேசவில்லை.

சில நாட்களிலேயே தொழிற்கூடத்தில் நிலைமை சீராகியது..பழையபடி ஆர்டர்கள் குவிந்தன..

அப்படி ஜிம்மின் உள்ளே என்னதான் இருந்தது?!!..

ஒரு மேஜையில் அமரர் உடல் வைக்கும் பெட்டி, அதைத் திறந்தால் அதனுள்.....


ஒரு கண்ணாடி!!!!!!!

பக்கத்தில் கொட்டை எழுத்தில் ஒரு வாசகம்..

'ஒரே ஒருவர் தான் உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும்..

அது நீங்கள் தான்..'

ஒருவரது மிகச் சிறந்த நண்பனும், மிகக் கொடுமையான எதிரியும் அவர் தான்.....

 அவர் மட்டுமே தான்..
+++++++++

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
- திருவள்ளுவர்.

"நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும். "(சுவாமி விவேகானந்தர்..இந்த ஆண்டு சுவாமிஜி விவேகானந்தர் நூற்றாண்டு..)

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
- Dr. David Schwartz

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
...ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.


அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.


நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

12 கருத்துகள்:

  1. மனதை கவர்ந்த வாசகம்... 100% உண்மை...

    இது போல் மேலும் தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான நீதிக்கதை. சொல்லியவிதமும் அழகு,. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், மற்றது
    தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

    எனும் குரலுக்கு ஏற்ப,

    நாம் உயர்வதும், வீழ்வதும் நமது எண்ணங்களாலே தான்.

    யத் பாவம் தத் பவதி என்பது உபநிஷத் வாக்கியம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  4. "YOU ARE MY BEST FRIEND IN THE WHOLE WORLD"

    அருமையான வாசகம். ;)))))

    பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  5. "தீதும் நன்றும் பிறர் தர வாரா..."

    பதிலளிநீக்கு
  6. திருக்குறளில் எனக்கு மிகவும் பிடித்த குறள் .

    "தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய்வருத்தக் கூலி தரும்."

    இந்தக்குறளை நான் எனது ஸ்டேடசாகவே வைத்திருக்கிறேன். இந்தக்குறளின் பொருள் இன்று வந்த கதையின் கருவில் தெரிந்தது. இது கதை என்பதைவிட மன நேர்த்தி கட்டுரை எனவும் சொல்லலாம்.

    தொடருங்கள் இது போன்ற கதைகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கருத்துரை தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!!!

      நீக்கு