வியாழன், 31 அக்டோபர், 2013

DEEPA OLI THIRUNAAL...தீப ஒளித் திருநாள்...

இந்தப் பாடலை,மிக அருமையாகப் பாடி, அழகான படங்களுடன் இணைத்திருக்கிறார், உயர்திரு.சுப்புத்தாத்தா.. கூடவே, மிக அழகாக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சேர்த்திருக்கிறார். கீழ்க்கண்ட  காணொளியில்  கேட்டு, கண்டு மகிழுங்கள்...


திசையெட்டும் ஒளிரட்டும் தீபங்கள் பொலியட்டும்!!
தீமைகள் அகன்று நல்ல திருவருள் நிறையட்டும்!!
வாழ்வெல்லாம் வளம் தரவே வாழ்த்துக்கள் மலரட்டும்!!
வண்ணமிகு வாணங்கள் எங்கெங்கும் நிறையட்டும்!!

மத்தாப்பு வாணங்கள், மகிழ்வான நல்வாழ்த்து,
புத்தாடை, பூ வாசம், புகழ் சேர்க்கும் விருந்தோம்பல்,
சத்தான சிற்றுண்டி, சந்தோஷ சிரிப்பொலிகள்,
முத்தான நாளிதுவே மலர்மகளை வணங்கிடுவோம்!

பொன்மகளே!  திருமகளே!  பூவுலகின் தலைமகளே!!
பொன்னடிகள் எடுத்து வைத்து நம் இல்லம் எழுந்தருள்க!!
பொன்னொளியில் குடியிருந்து, புவி சிறக்க வரமருள்க!!
பொன்னினும் பெரிய நல் மனம் தந்து நலமருள்க!!!

எந்நாளும் எம் மக்கள் சிரித்திருக்க வரமருள்க!!!
எங்கெங்கும் இன்பமயம் என்றிருக்கும் நிலையருள்க!!
இல்லையெனும் சொல் இல்லா நல்லுலகம் தனையருள்க!!
ஏற்றமிகு நல்வாழ்வு எல்லோர்க்கும் நீ அருள்க!!!

ஒளிர்கின்ற விளக்கினிலே மிளிர்கின்ற மெய்ச்சுடரே!!!
பளிங்கொத்த மனம் தந்து பவ வினைகள் தீர்த்திடுவாய்!!!
வளி போல வருந்துன்பந் தனிலிருந்து காத்தருள்வாய்!!!
தளிரொத்த திருவடிகள் பணிந்து தினம் வணங்கிடுவோம்!!!

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!. பொங்கும் இன்பம் தங்குக எங்கும்!!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 28 அக்டோபர், 2013

MINI STORIES...UNGALIN NANBAN..சின்னஞ்சிறு கதைகள்...உங்களின் நண்பன்


அது ஒரு தொழிற்சாலை..

சில நூறு நபர்கள் மட்டுமே பணிபுரிந்தார்கள். ஆனால் அவர்களது வேலைத் திறமையின் காரணமாக, அந்தத் தொழிற்சாலைக்கு ஆர்டர்கள் குவிந்தன. தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு அருமையான தொழிற்கூடமாக அது திகழ்ந்தது.

தொழிற்சாலையின் அதிபர்.. தொழிலை விரிவு படுத்துவதற்காக சுற்றுப் பயணம் புறப்படத் தீர்மானித்தார்..தொழிற்சாலையை, தொழிலாளர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்.

திரும்பியதும்,  அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது..

 திடீரென்று ஆர்டர்கள்  குறைந்திருந்தன. தரம், மற்ற விஷயங்களில் எந்த மாற்றமும் இல்லை. போட்டித் தொழிற்கூடங்கள், தரத்தில் போட்டியிட முடியவில்லை. ஆயினும் அங்கு ஆர்டர்கள் குவிந்தன...

தொழிற்கூடத்தின் அதிபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். காரணம் தேடினார். சில காலமாக, கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் சரியாக டெலிவரி செய்யப்படாதது தான் காரணம் என்று தெரிந்து கொண்டார்.

அவருக்குப் பேராச்சரியம்.. என்ன ஆச்சு தொழிலாளர்களுக்கு.. ஏதாவது பிரச்னை அல்லது குறையா.. ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பித்தார். காரணம் பளிச்சென்று புரிந்தது..

ஒவ்வொருவரிடமும் பெரிய புகார் பட்டியல்... என் திறமையை இவர் மதிக்கவில்லை. நான் முன்னேறக் கூடாதென திட்டமிட்டு வேலை செய்கிறார்...மட்டம் தட்டுகிறார்.. அவர் என்னைப் பற்றி துஷ்பிரசாரம் செய்கிறார்.' இப்படி நீண்டது பட்டியல்..

ஒரு அதிர்ச்சி வைத்தியம் தரத் தீர்மானித்தார் தொழிற்கூடத்தின் அதிபர்.

ஒரு நாள், தொழிலாளர்கள், தொழிற்கூடத்தின் வாசலில் ஒரு பெரிய அறிவிப்புப் பலகையைப் பார்த்தனர்..

'உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்த மிகக் கொடுமையான எதிரி இன்று மறைந்து விட்டார்.. தொழிற்கூடத்தின் உடற்பயிற்சி மையத்தில், அவரைக் காணலாம்..'

ஜிம்மை நோக்கி முண்டியடித்தது தொழிலாளர் கூட்டம்.. ஒருவருக்கொருவர் காரசாரமான உரையாடலில் ஈடுபட்டனர். சிலர், 'மலர் வளையம் கூட வைக்கக் கூடாது.. இவரெல்லாம் மரியாதைக்குரியவரல்ல..' என்பதாக மனிதநேயமில்லாமல் கூட பேசத் தலைப்பட்டனர். 

ஆனால், ஜிம்மின் உள்ளே நுழைந்து வந்தவர் யார் முகத்திலும் ஈயாடவில்லை. அதிர்ச்சி நிரம்பிய முகத்தோடு அவரவர் இடத்திற்குச் சென்ற‌னர். யாருடனும் பேசவில்லை.

சில நாட்களிலேயே தொழிற்கூடத்தில் நிலைமை சீராகியது..பழையபடி ஆர்டர்கள் குவிந்தன..

அப்படி ஜிம்மின் உள்ளே என்னதான் இருந்தது?!!..

ஒரு மேஜையில் அமரர் உடல் வைக்கும் பெட்டி, அதைத் திறந்தால் அதனுள்.....


ஒரு கண்ணாடி!!!!!!!

பக்கத்தில் கொட்டை எழுத்தில் ஒரு வாசகம்..

'ஒரே ஒருவர் தான் உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும்..

அது நீங்கள் தான்..'

ஒருவரது மிகச் சிறந்த நண்பனும், மிகக் கொடுமையான எதிரியும் அவர் தான்.....

 அவர் மட்டுமே தான்..
+++++++++

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
- திருவள்ளுவர்.

"நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும். "(சுவாமி விவேகானந்தர்..இந்த ஆண்டு சுவாமிஜி விவேகானந்தர் நூற்றாண்டு..)

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
- Dr. David Schwartz

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
...ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.


அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.


நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

திங்கள், 21 அக்டோபர், 2013

THANUSUVIN KURUNGAVITHAIGAL... தனுசுவின் குறுங்கவிதைகள்..

என் கவலை

ஆந்திரா இரண்டாக பிரித்து
தெலுங்கானா உதயம்

எனக்கொரு குழப்பம்

எனக்கு பிடித்த
காரமான சாப்பாட்டை
இனி
எந்த பெயர் சொல்லி அழைப்பேன்?!!....





பேஸ் புக்

பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது
வெட்டியாய்
அரட்டை அடிக்க உட்கார்ந்த
குட்டிச் சுவரும்....





மடியில்

நான் பெற்ற குழந்தை
வேலைக்காரியின் மடியில்.
என் மடியில்
மடிக்கணினி.....

-தனுசு-

வெள்ளி, 18 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 9... நவராத்திரி கவிதைகள்... பகுதி..9 ஆரத்தி எடுப்போம்!!


பாடலை, கீழ்க்கண்ட லிங்கில், உயர்திரு.சுப்பு தாத்தாவின் குரலில் கேட்டு மகிழலாம். மத்யமாவதி ராகத்தில் அருமையாகப் பாடியிருக்கிறார். அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள்..
 
பல்லவி:
முத்து பச்சை கெம்பு ரத்ன பவள ஆரத்தி..
முழுமுதலே  உனக்கெடுப்போம் தீப ஆரத்தி..(முத்து)

அனுபல்லவி:

இரு தீபம் நெய்யில் ஏற்றி இலங்கு மஞ்சள் நீரும் இட்டு
இரு வினைகள்  தீர்ந்திடவே  எடுத்திடுவோம் ஆரத்தி..(முத்து)

சரணம்;
1.தேவி மஹா துர்க்கையளும் திருநிறைந்த மலர்மகளும்
கலை அருளும் வாணியளும் கொலுவிருக்கும்  நாளிதுவே
புவி மிசையில் மன்னுயிர்கள் புகழோடும் நிறைவோடும்
பொங்கும் அன்பு நலத்தோடும்  வாழ வேண்டும் தேவியரே!!  (முத்து)

2.பைரவியே பார்க்கவியே பாரதியே போற்றிடுவோம்!!
பாரினிலே ஒளி நிறைய ஏற்றிடுவோம் ஆரத்தி!
மங்களங்கள்  பாடிடுவோம் மனம் மகிழ்ந்து வாழ்த்திடுவோம்!!
மறுவருடம் வர வேண்டி எடுத்திடுவோம் ஆரத்தி!!  (முத்து)

இந்த வருட நவராத்திரி கவிதைகள் இனிதே நிறைவுற்றன..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்..

வியாழன், 17 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 8.. நவராத்திரி கவிதைகள்..8.. பிராம்மி!!

 

சப்தமாதர்களின் முதலாவது தேவியான 'பிராம்மி' தேவியைக் குறித்த பாடல்...

ஆக்கும் தொழில் செய்யும் அன்பன் நாவில் உறைபவளே
அகிலம் முழுதும் உயிர்கள் படைக்கும் சக்தி தருபவளே
பிரம்ம தேவன் சக்தி பிராம்மி எனும் என் தாயே
பிள்ளை வரம் தந்தே பெரு மகிழ்ச்சி தருவாயே

நான்கு திருமுகங்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டு
நாளும் அன்னமதில் நடை பழகி வருபவளே
நலமருள் ஜபமாலை, கமண்டலமும் தரிப்பவளே
நல்லோர்க் கப‌யம் தந்து வரம் பலவும் தருபவளே

அம்பிகை திருமுகத்தில் தோன்றி வந்த பிரம்மாணி
அழகாய் பீதாம்பரம் அணிந்தருளும் ஜடாதாரணி
அன்னை உன் பெருமை சொல்ல சொல்ல இனிமையம்மா
அடியாள் அறியேனே அன்பு செய்து அருள்வாயம்மா

மான் தோல் தரித்து வந்து மா ஞானம் தருபவளே
மறதி நீக்குகின்ற மஹா சக்தி தேவியளே
மன்னுயிர் காக்கும் மாதா மண்டலத்தைக் காப்பவளே
மலரடி தொழுதேனே  மனக் குறைக‌ள்  தீர்ப்பாயே!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 7..நவராத்திரி கவிதைகள்.. பகுதி 7 ..ஸ்ரீ மாஹேஸ்வரி

சப்த மாதர்களுள் ஒருவரான ஸ்ரீமாஹேஸ்வரி தேவியைக் குறித்த பாடல்...

ருத்ரனின் சக்தியே ருத்ராணி தேவியே
ரிஷபத்தின் மீதிருந்தருள் தரும் சூலியே
ரௌத்ரி, மகேசி, மாஹேஸ்வரி மாயே
ர‌க்ஷித்தருள்வாயே நானும் உன் சேயே

வெள்ளைக் கலையுடுத்தி வந்தருளும் தாயே
வடகிழக்கு திக்கின் அதிபதியும் நீயே
கரம் நான்கில் சூலம், மான், மழு, கபாலம்
கனிந்தருளும் விழி மூன்றும் கொண்டவள் நீயே

கற்றைச் சடைமுடியில் சந்திரன் துலங்க
பற்றை அழித்தருளும் புன்னகை இலங்க‌
இற்றை பொழுதினிலே எழுந்து நீ வருவாய்
 ஒற்றை வழிப் பிறவி நோயதனைத் தீர்ப்பாய்

பக்தர் தம் மனத்திருக்கும் உக்ரமதை நீக்கி
பல நலனும் தரும் சாந்தம் உள்ளமதில் தேக்கி
பனி நிகர் குணமளித்து பல கலையும் அருள்வாய்
பார் புகழும் வாழ்வளித்து பதமலரும்  தருவாய்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

புதன், 16 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL. PART 5, நவராத்திரி கவிதைகள்.. பகுதி 5. திருமகளே வளமருள்க...

பொன்னும் மணியும் தந்திடுவாய் நீ
பொலிவும் புகழும் தந்திடுவாய்.
எண்ணில் இன்பம் தந்திடுவாய் நீ
ஏழ்மை விலகச் செய்திடுவாய்.

விண்ணும் மண்ணும் தினந்தொழுமே நீ
விழியசைத்தால் வரும் பொன்னகரே!
வீரம் தானம் தவமெல்லாம் நீ
விரும்பும் மனிதர் அடைவாரே!.

அருளது அமுதெனப் பெருக்கிடுவாய் நீ
பொருளது நிறைந்திட அருளிடுவாய்!
அகமதில் இலங்கிடும் நல்லொளியே நீ
சுகத்தினைத் தந்திடும் வெண்மதியே!

அலைமக‌ள் திருமகள் மலர்மகளே நீ
அழகுக்கு அழகெனத் திகழ்பவளே!
பவத்தினை தீர்த்திடும் பொன்னொளியே நீ
நவத்தினைத் தாண்டிய நல்லழகே!

ஆதியும்  அந்தமும் உன்னடியே நீ
ஆனந்த சொரூபிணி அம்பிகையே!
இன்னருள் தந்திடும் பொன்மயிலே நீ
சொன்னதும் வந்திடும் நவநிதியே!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

செவ்வாய், 15 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 6, நவராத்திரி கவிதைகள்.. பகுதி 6, கும்பிடுறோம் மாரியம்மா!!!

'சக்தி ரதம்' இழுக்க வந்த ஒரு கிராமியப் பாடல்...



இந்தப் பாடலை, உயர்திரு.சுப்பு தாத்தா மிக அருமையாக, கிராமிய மெட்டில் பாடி, அவருடைய வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. பாடலைக் கேட்க, கீழ்க்கண்ட  காணொளியைச்  சொடுக்கவும்..

 


 தன் வலைப்பூவிலும், இந்தப் பாடலை வெளியிட்டிருக்கிறார் தாத்தா... அந்த லிங்கைக் கீழே கொடுத்திருக்கேன்.


மாரி மாகாளி மதுர காளி அங்காளி!!
மானங் கூரையாக ஆட்சி செய்யும் வெக்காளி!!
 எந்திருச்சு வாருமம்மா எங்க மொகம் பாருமம்மா!!
கும்பிடுறோம் மாரியம்மா கொறைகள நீ தீருமம்மா!!

வேம்பே ஆடையம்மா வேல் விழியே வாருமம்மா!!
பாம்பும் குடை பிடிக்க பாக்கியவதி பாருமம்மா!!
பம்பையது ஒலிக்குதம்மா உடுக்க சத்தம் ஓங்குதம்மா!!
கம்பங் கூழ் காச்சி வச்சோம் காத்தாயி வாருமம்மா!!

தட்டுல பழங்க வச்சோம் தார் தாரா வாழ(ழை) வச்சோம்!!
தாம்பாளம் நெறைய பூவும் தங்க மஞ்சளுஞ் சேர்ந்து வச்சோம்!!
குங்குமத்துக் காரியே நீ கொலுவிருக்க வாருமம்மா!!
பொங்கலிட்டு படையலிட்டோம் புள்ளகளக் காருமம்மா!!

எலுமிச்சம் பழ மால எங்க ஊரு வெத்திலையும்!!
எட்டுக் கச புதுச் சேல வாங்கி வச்சோம் பத்தலையா?!!
ஏழ சனம் பாட வந்தோம் எங்க கொற தீருமம்மா!!
எட்டு வச்சு வாருமம்மா பொட்டழகி பாருமம்மா!!

 மொளைப்பாரி எடுத்து வந்தோம்  மான மழ பொழிய வேணும்!!
மாவிளக்கு ஏத்தி வச்சோம் மக்க பசி தீர வேணும்!!
தீச்சட்டி ஏந்தி வந்தோம் தீமைகள போக்கிடம்மா!!
பூ மிதிச்சு  வந்தோமம்மா பூச வச்சோம் ஏத்துக்கம்மா!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 14 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL. PART 4.... நவராத்திரி கவிதைகள்.. பகுதி..4.. திருமால் விரும்பும் திருவே லக்ஷ்மீ...

திருமால் விரும்பும் திருவே லக்ஷ்மீ!
திடமாய் தொழுவோர் திறமே லக்ஷ்மீ!!
திருவிளக்கு ஒளியே திருமகள் லக்ஷ்மீ!!!
தெளிந்த மதியில் திகழ்பவள் லக்ஷ்மீ!!!!

பிறையின் சோதரி புகழ் தரும் லக்ஷ்மீ!
பெம்மான் மார்பில் உறைபவள் லக்ஷ்மீ!!
பத்மம் ஏந்திடும் பத்மை லக்ஷ்மீ!!!
பற்றது நீங்கிட பதம் தரும் லக்ஷ்மீ!!!!

பொன்னில் செல்வி பொலிவே லக்ஷ்மீ!
பொறை நிறை மனதில் நிறைபவள் லக்ஷ்மீ!!
பொங்கும் மங்கலம் தருவாள் லக்ஷ்மீ!!!
பொழுதுகள் சிறந்திட‌ அருள்வாள் லக்ஷ்மீ!!!!

நித்யை நந்தினி ரஞ்சனி லக்ஷ்மீ!
நித்ய பிரகாசிநி நீங்கா லக்ஷ்மீ!!
நிறைவின் உருவே  நிர்மலை லக்ஷ்மீ!!!
நிதமும் துதிப்போம் நிறைவாள் லக்ஷ்மீ.!!!!

அன்பர்கள் அனைவருக்கும் விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL, PART 3....நவராத்திரி கவிதைகள்..பகுதி 3, கலைமகளே வரமருள்வாய்!!!



வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் மஹாநவமி தின நல்வாழ்த்துக்கள்!!!!

உயர்திரு.சுப்பு தாத்தா, ராகமாலிகையில், மேற்கண்ட பாடலை மிக அழகாகப் பாடி அளித்திருக்கிறார். தன்யாசி, காவடிச் சிந்து, சாரங்கா, மத்யமாவதி ராகங்களில் அருமையாகப் பாடியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி... கீழ்க்கண்ட லிங்கில் கேட்டு மகிழுங்கள்... 

பொங்கும் கவிதை தர உன்னருளே ஊற்றாகும்.
எங்கும் புகழ்  வளர‌ நின்னருளே வேராகும்.
தங்கக் கொலுசொலிக்க நடை பழகும் வெண்மயிலே!!
கங்கை உன் கருணை! கரம்  குவித்தோம் கவியருள்வாய்!.

வெள்ளைக் கலையுடுத்தி வீணையுடன் வீற்றிருப்பாய்!
வெல்லும் திறமளித்து வீழ்ச்சியில்லா வாழ்வளிப்பாய்!
வெம்மை நிறைந்தொளிரும் பொன்சுடரே சாரதையே!
வேண்டும் வரம் பெறவே கரம் குவித்தோம் பதமருள்வாய்!

கம்பர் மனத்திருந்து கவி பலவும் தந்தவளே!
செம்பொற் சிலம்பணிந்து சபையினிலே வருபவளே!
பம் பம் என்றொலிக்கும் துந்துபிகள் முழங்கிடவே!
இன்பம் தரும் கவிகள் பொழிந்திடவே வரமருள்வாய்!

வாணி நாமகளே பாரதியே பாமகளே!
வாக்கின் எழிலரசி  வணங்குகிறோம் கலைமகளே!
வேத நாதன் தொழும் ஞானத் திருமகளே!
வெற்றி  முரசொலிக்க‌ விரைவாய் வந்தருள்வாய்.!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.