வெள்ளி, 27 செப்டம்பர், 2013

MINI STORIES... ODUTHAL ENBATHU..சின்னஞ்சிறு கதைகள்... ஓடுதல் என்பது...


அதிகாலை இளங்காற்று என் மேல் வந்து மோதியது. ஷூ லேஸை இறுகக் கட்டினேன். 

தெரு விளக்குகள் வீசிய ஒளிவெள்ளம் தெருவெல்லாம் சிந்தியிருந்தது. கேட்டைத் திறந்து வெளிவந்தேன். இந்த அதிகாலை நேரத்தில், ஓரிருவர் வாக்கிங் சென்று கொண்டிருக்க, சிலர்  ஓடிக் கொண்டிருந்தார்கள்.  நான்  மெல்..ல ஓட ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தேன்.

ஓடிக் கொண்டிருப்போரில் பலர் பழக்கம் ஆனவர்கள். புன்னகைத்தார்கள். பதிலுக்கு நானும்.

கொஞ்ச நேரம் ஓடினேன். ஒருவர் என்னைக் கடந்தார். மின்னல் வேகம்... அயர்ந்து போனேன். பார்த்தால் வயதானவர் போல் தெரிந்தார். ஆனாலும் அவர் வேகம் நம்ப முடியாததாக இருந்தது. எனக்குள் தீப்பொறி. 'இவரைக் கடந்து ஓட வேண்டும்'. தீர்மானித்ததும், வேகத்தை அதிகரித்தேன். புயலாக ஓட ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்திலேயே அவருக்கு அருகில் வந்து விட்டேன். இன்னும் கொஞ்சம்...கொஞ்ச்..சம் தூரம் தான். ஆ!... இதோ.. இதோ அவரை அடைந்தே விட்டேன். இன்னும்..இன்னும் வேகம்.. தாண்டியே விட்டேன் அவரை.

அவரை விட்டு வெகு தூரம் விலகி வந்த பின்பு மெல்ல நிதானித்தேன். குனிந்து மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வாயால் வெளிவிட்டேன். வென்று விட்ட பெருமிதம் மனதை நிறைக்க, மெல்ல திரும்பிப் பார்த்தேன். எந்த வித சலனமும் இல்லாமல் அந்த மனிதர் என்னைக் கடந்தார். அவருக்கு நான் அவரோடு போட்டியிட்டது கூடத் தெரியவில்லை.. பாவம்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். 'திக்' கென்றது. இது எந்த இடம்?. அருகிலிருந்த பலகை, மௌனமாக, 'நீ போக வேண்டிய இடத்திலிருந்து வெகு தூரம்..' என்றது. அதிர்ந்தேன்.. திரும்பவும் போக வேண்டும் வெகு தூரம். இப்போது மணி என்ன?. ஏழு என்றது கைக்கடிகாரம். அப்படியென்றால்.. திரும்பி ஓட இயலாது. வேக நடை நடந்து சென்றால் ஏழரை அல்லது ஏழே முக்கால் ஆகலாம். எட்டு மணிக்கு அலுவலகத்தில் இன்று இருக்க வேண்டும் என்பது திடீரென மனதில் பளீரிட்டது. முக்கியமான மீட்டிங். ஆறரைக்குக் குளித்துத் தயாராக வேண்டுமென நினைத்தது தேவையில்லாத போட்டியால் பாழானது புரிந்தது.

உண்மையில் நான் அடைந்தது வெற்றியல்ல. மோசமான தோல்வி.. வருத்தம் தோய்ந்த முகத்துடன், மெல்லத் திரும்பி நடக்கலானேன்..

கதை சொல்லும் நீதி:

நம்மில் பலர், இப்படித்தான் தேவையேயில்லாமல், உற்றார், உறவினர், நண்பர்கள், அண்டை வீட்டுக் காரன் என அனைவருடனும் போட்டியிடுகிறோம். மனதால் நித்தம் நித்தம் குமைந்து, 'அவன் என்ன உசத்தி.. என்னை விடவா' என்று ஒப்பிட்டு யுத்தம் செய்கிறோம். மனமென்னும்  கோயிலில் சத்தமில்லா யுத்தக் களங்கள் ஒரு நூறு கட்டி வைத்து ஓயாமல் மாற்றி, மாற்றிப் போரிடுகிறோம். ஏன் என்றும் புரியாமல், எதற்கு என்றும் தெரியாமல் அனைவரையும் விரோதியாகவே பாவிக்கிறோம். நம்மை விடவும் நல்ல கார் வைத்திருக்கிறானா, வீடு இருக்கிறதா, அட.. நம்மை விடவும் காஸ்ட்லி ஷர்ட்டா.. போச்சு.. உடனே காரணம் தெரியாத விரோதத் தீ பரவுகிறது. உண்மையான நட்புடன், நமக்கு ஆபத்தில் உதவி செய்யக் கூடிய சுபாவம் அவருக்கு இருந்தும், நம்மால் ஒட்ட முடியாமல் போகிறது.

ஆரோக்கியமற்ற இந்தப் போட்டி மனப்பான்மை, ஒரு முடிவற்ற சுழல். மாட்டிக் கொள்வோரை மாயமாக்கி  விடும் தன்மையுடையது. நமக்கென்று இருக்கும் வாழ்வு, லட்சியம், கொள்கை அனைத்திலும் போக வேண்டிய நமது கவனத்தை, இவற்றில் சிதறச் செய்வது என்ன நியாயம்?. கடவுள் நமக்கே நமக்கென வகுத்து வைத்திருக்கும் பாதையில் நடை போட்டு உயராமல், அடுத்தவர் பாதையையே நாமும் தேர்ந்தெடுத்து ஓடுதல் என்ன பலன் தரும்?.

நம் முன்னோர்கள் இதனால் தான் 'அஞ்சு விரலும் ஒண்ணு போல் இருக்காது..' என்று  சொல்லிச் சென்றார்கள். பரந்த இப்பூவுலகில், ஒவ்வொரு படைப்பும் தனித்தன்மையுடையன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டால் யாருக்கு நட்டம்?.

ஒப்பீடு செய்யாமல், ஒழுங்காக நம் பாதையில் சந்தோஷமாகச் செல்வோம். அப்போது தான் அருகில் செல்பவரைப் பார்த்து புன்னகைக்கவும் வாழ்த்தவும் இயலும். அடுத்தவர் உயரம் ஆழ்மனது வரை பரவசப்படுத்தும் மனம் படைத்த பாக்கியசாலிகளாவோம்.

ஓவர் டோஸ் அட்வைஸாப்படுதா.. செரி.. கொஞ்சம் சிரீங்.

இப்படியெல்லாமும் போட்டி போடக் கூடாத்.. தப்..

(காணொளியை வலையேற்றியவருக்கு ரொம்ப தேங்ஸு..)

அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

புதன், 18 செப்டம்பர், 2013

MINI STORIES.2 ...சின்னஞ்சிறு கதைகள்..2 தவளைகளின் சத்தம்!!


அது ஒரு சைனீஸ் ரெஸ்டாரென்ட். ஊருக்கு நடுவில் இருந்தது. படாடோபமாக உடை உடுத்திய மனிதர்கள் பலர் வருவதும் போவதுமாக, மாலை வேளையில் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது.

சற்று அழுக்கான உடை உடுத்திய ஒரு விவசாயி அங்கு வந்தான். வாசலில் இருந்த உணவுப் பட்டியலைப் பார்த்தவன், உணவகத்தின் உரிமையாளரைத் தான் சந்திக்க வேண்டுமெனக் கோரினான். அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம்!!. ஆயினும், உரிமையாளரிடம் அவனை அழைத்துச் சென்றனர்.

உரிமையாளர், மரியாதையாக அவனை வரவேற்று அமரச் செய்து விசாரித்தார். உரையாடல் கீழ்க்கண்டவாறு இருந்தது...

'உங்கள் உணவகத்தில், தவளைகளைக் கொண்டு சமைக்கப்படும் உணவு வகைகள் மிகுந்திருக்கின்றன. என்னால் அதிக அளவு தவளைகளை உங்களுக்கு   விற்க முடியும்.'

'அப்படியா?... மிகவும் நல்லது. எவ்வளவு தவளைகள்?'

'ஐநூறு.. ஆயிரம்...'

'அடேயப்பா!!.. எப்படி இவ்வளவு தவளைகள் தர இயலும்?'

'என் வீட்டருகில் ஒரு குளம் இருக்கிறது. அதில் நிறையத் தவளைகள். தினம் இரவு நேரத்தில் தூங்க விடாமல் சத்தமிட்டு அதிக அளவு தொந்த்ரவு செய்கின்றன. அவற்றின் சத்தத்தை வைத்துச் சொல்கிறேன். குறைந்தது ஆயிரமாவது இருக்கும்'.

'நல்லது.. அப்படியானால் அடுத்த வாரம் தவளைகளுடன் வாருங்கள். நல்ல விலை தருகிறேன்.'

விவசாயி விடை பெற்றுப் போனான். 

அடுத்த வாரம், விவசாயி கொண்டு வந்த தவளைகளைப் பார்த்து அதிர்ந்து போனார் உணவக உரிமையாளர்.

இரண்டே இரண்டு தவளைகளை மட்டுமே கொண்டு வந்திருந்தான் விவசாயி. 

'இது என்ன, இரண்டு தவளைகள் மாத்திரம் கொண்டு வந்திருக்கிறீர்கள்?. மீதி எங்கே?'.

'இல்லை, நான் தான் தவறாகக் கணித்து விட்டேன். தவளைகளின் சத்தத்தைக் கேட்டு, அதிக அளவில் தவளைகள் இருப்பதாக நினைத்து விட்டேன். உண்மையில் இவை இரண்டு மட்டுமே அந்தக் குளத்தில் இருந்தன. ஆனால் இவற்றின் சத்தமே மிக அதிகமாக இருந்தது..'.

உணவக உரிமையாளர் என்ன சொல்லியிருப்பார் என்பதை விடுங்கள்.. 

கதை சொல்லும் நீதி என்ன?

1. அடுத்த முறை உங்களை யாராவது நியாயமற்ற முறையில் கடுமையாக விமரிசித்தால் அல்லது கிண்டல் செய்தால், நினைவு கொள்ளுங்கள்.. இந்த இரண்டு தவளைகளை... பெரிது படுத்தி வருந்த வேண்டாம்.

2.பயம் என்ற இருட்டில் வைத்துப் பார்க்கும் போது, பிரச்னைகள் மிக பூதாகாரமாக தோற்றமளிப்பது இயல்பே...

இரவு நேரத்தில், உறங்கச் செல்லும் முன், ஆயிரம் தவளைகளின் சத்தத்துக்கு ஈடாக தொந்தரவு செய்யும் பிரச்னைகள், உறங்கி எழுந்ததும் மிக லேசாகத் தோற்றமளிப்பது இயல்பே..சில சமயம் தீர்வுகள் கூட உங்களுக்குப் புலப்படும். 

ஆகையால், பிரச்னைகளைக் கண்டு மிரளாதீர்கள்.  எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். சற்று அருகில் நெருங்கி, எப்படி கையாளுவது என்று யோசிக்கத் துவங்கினீர்களானால், மிரட்டிய பல பிரச்னைகள், உண்மையில் மிக எளிமையானவையே என்று உணர்வீர்கள்!!..

எல்லாவற்றிற்கும் மேலாக, காலம் என்று ஒன்று இருக்கிறது. அது தீர்த்து வைக்காத பிரச்னைகள் மிக மிகக் குறைவு. நம்பிக்கை கொள்ளுங்கள். விடியல் அருகில் இருக்கிறது.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி:. கூகுள் படங்கள்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

VINAYAGAR THIRU AGAVAL...நக்கீரர் அருளிய விநாயகர் திருஅகவல்



சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே
கார்நிற மேனிக் கற்பகக் களிறே
அல்லல் வினையை யறுத்திடு ஞான
வல்லபை தன்னை மருவிய மார்பா
பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தி
சங்கரனருளிய சற்குரு விநாயகா
ஏழையடியே னிருவிழி காண
வேழமுகமும் வெண் பிறைக் கோடும்
பெருகிய செவியும் பேழை வயிறும்
திருவளர் நுதலின் திருநீற் றழகுஞ்
சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்
நறுந்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும்
நவமணி மகுட நன்மலர் முடியும்
கவச குண்டல காந்தியும் விளங்கச்
சிந்துரத் திலகச் சந்தனப் பொட்டும்
ஐந்து கரத்தினழகும் வீற்றிருக்க
பாச வினையைப் பறித்திடு மங்குச
பாசத் தொளியும் பன்மணி மார்பும்
பொன் னாபரணமும் பொருந்துமுந் நூலும்
மின்னா மெனவே விளங்கு பட்டழகும்
உந்திச் சுழியும் உரோமத்தழகும்
தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்ற
வேதனு மாலும் விமலனு மறியாப்
பாதச் சலங்கைப் பலதொனி யார்ப்பத்
தண்டைச் சிலம்புந் தங்கக் கொலுசும்
எண்டிசை மண்டல மெங்கு முழங்கத்
தொகுது துந்ததுமி தொந்தோ மெனவே
தகுகு திந்திமி தாள முழங்க
ஆடிய பாத மண்டர்கள் போற்ற
நாடிமெய்யடியார் நாளுந் துதிக்கக்
கருணை புரிந்து காட்சித்தந்தருள
இருளைக் கடிந்து எங்கும் நிறையப்
பொங்குபே ரொளியாய்ப் பொன்மலை போலத்
திங்கள் முடியான் றிருவுள மகிழ
வந்த வாரண வடிவையுங் காட்டிச்
சிந்தை தளர்ந்த சீரடியார்க்கு
இகபர சாதன மிரண்டு முதவி
அகவினைத் துன்ப மகந்தை யறுத்து
மூலா தார முச்சுடர் காட்டி
வாலாம்பிகை தன் வடிவையுங் காட்டி
மாணிக்க மேனி மலர்ப் பதங் காட்டிப்
பேணிப் பணியப் பீஜா ட்சரமும்
ஓமென் றுதித்த ஓங்காரத் துள்ளே
ஆமென் றெழுந்த அட்சர வடிவும்
இடைபிங் கலைகளி ரண்டினடுவே
கடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்து
மண்டல மூன்றும் வாய்வோர் பத்துங்
குண்டலி யசைவிலி கூறிய நாடியும்
பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும்
வாதனை செய்யு மறிவையுங் காட்டி
ஆறா தார அங்குச நிலையைப்
பேறாகி நின்ற பெருமையுங் காட்டிப்
பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்த
பஞ்சத் திகளின் பாதமுங் காட்டி
நவ்விட மௌவும் நடுவணை வீட்டில்
அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம்
மைவிழி ஞான மனோண்மணி பாதமும்
நைவினை நணுகா நாத கீதமும்
கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து
விண்டலமான வெளியையுங் காட்டி
ஐம்பத் தோரெழுத் தட்சர நிலையை
இன்பச் சக்கர விதிதனைக் காட்டி
புருவ நடுவணைப் பொற்கம லாசனன்
திருவிளை யாடலின் திருவடி காட்டி
நாதமும் விந்தும் நடுநிலை காட்டி
போத நிறைந்த பூரணங் காட்டி
உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி
வச்சிரம் பச்சை மரகத முத்துப்
பவள நிறைந்த பளிங்கொளி காட்டிச்
சிவகயி லாசச் சேர்வையுங் காட்டிச்
சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித்
தத்துவத் தொண்ணூற் றாறையு நீக்கிக்
கருவி காணக் களங்க மறுத்து
மருவிய பிறவி மாயையை நீக்கி
உம்பர்கள் ரிஷிகள் ஒருவருங் காணா
அம்பர வெளியி னருளையுங் காட்டிச்
சத்தி பராபரைசதானந்தி நிராமய
நித்திய ரூபி நிலைமையுங் காட்டி
அடியவர் ஞான மமிர்தமா யுண்ணும்
வடிவை யறியும் வழிதனைக் காட்டி
நாசி நுனியில் நடக்குங் கலைகள்
வாசிவா வென்று வாங்கிப் பிடித்து
நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்
வின்மய மான விதத்தையுங் காட்டித்
தராதல முழுதுந் தானாய் நிறைந்த
பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி
என்னுட லாவியிடம் பொரு ளியாவுந்
தன்னுடை வசமாந் தவநிலை காட்டி
நானெனு மாணவம் நாசம தாகத்
தானென வந்து தயக்கந் தீர
ஆன குருவா யாட்கொண்டருளி
மோன ஞான முழுது மளித்துச்
சிற்பரி பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிஷ்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீடனும் கூடிக் கலந்து
இருவரு மொருதனி இடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
புவனத் தொழிலைப் பொய்யென றுணர்ந்து
மவுன முத்திரைய மனத்தினி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டது மாயைக் கனவெனக் காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னிணையடி யிருத்தி மனத்தே
நீயே நானாய் நானே நீயாய்க்
காயா புரியைக் கனவென உணர்ந்து
எல்லா முன்செய லென்றே யுணர
நல்லா யுன்னருள் நாட்டம்தருவாய்
காரண குருவே கற்பகக் களிறே
வாரண முகத்து வள்ளலே போற்றி
நித்திய பூஜை நைவேத்தியமும்
பத்தடியாக் கொடுத்தேன் பரமனே போற்றி
ஏத்தியனுதின மெளியேன் பணியக்
கூற்றினை யுதைந்த குளிர்பதந் தந்து
ஆசுமதுர வமிர்த மளித்தும்
பேசு ஞானப் பேரெனக் கருளி
மனத்தில் நினைத்த மதுர வாசகம்
நினைவினுங் கனவிலும் நேசம் பொருந்தி
அருணகிரியா ரவ்வை போலக்
கருத்து மிகுந்த கவிமழை பொழிய
வாக்குக் கெட்டா வாழ்வை யளித்து
நோக்கரு ஞான நோக்கு மளித்து
இல்லற வாழ்க்கை யிடையூறகற்றிப்
புல்லரிடத்திற் புகுந்துழ லாமல்
ஏற்ப திகழ்ச்சி என்பதகற்றிக்
காப்ப துனக்குக் கடன் கண்டாயே
நல்லினை தீவினை நாடி வருகினுஞ்
செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையும் நீயே தாயும் நீயே
போத ஞானப் பொருளும் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே
அரியும் நீயே அயனும் நீயே
திரிபுர தகனஞ் செய்தவன் நீயே
சத்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே புராந்தகன் நீயே
பத்தியும் நீயே பந்தமும் நீயே
முத்தியும் நீயே மோட்சமும் நீயே
ஏகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேவனும் நீயே
உன்னருளின்றி உயிர்த்துணை காணேன்
பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்
வேதனை கொடுத்த மெய்யிது தன்னில்
வாத பித்தம் வருத்திடு சிலேத்துமம்
மூன்றுத நாடியும் முக்கணமாகித்
தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலாயிரத்து நானூற்று நாற் பத்தெண்
மேலாம் வினையை மெலியக் களைந்து
அஞ்சா நிலைமை யருளியே நித்தன்
பஞ்சாட்சரநிலை பாலித் தெனக்குச்
செல்வமும் கல்வியும் சீரும் பெருக
நல்வர மேதரும் நான்மறை விநாயகா
சத்திய வாக்குச் சத்தா யுதவிப்
புத்திர னேதரும் புண்ணிய முதலே
வெண்ணீ றணியும் விமலன் புதல்வா
பெண்ணா முமையாள் பெற்றிடுந்தேவே
அரிதிரு மருகா அறுமுகன் துணைவா
கரிமுக வாரணக் கணபதி சரணம்
குருவே சரணம் குணமே சரணம்
பெருவயிற்றோனே பொற்றாள் சரணம்
கண்ணே மணியே கதியே சரணம்
விண்ணே யொளியே வேந்தே சரணம்
மானத வாவி மலர்த் தடத் தருகில்
தானத்தில் வாழும் தற்பரா சரணம்
உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்
சச்சிதானந்த சற்குரு சரணம்
விக்கிந விநாயகா தேவே ஓம்
ஹரஹர ஷண்முக பவனே ஓம்
சிவசிவ மஹாதேவ சம்போ ஓம்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

தனுசுவின் குறுங்கவிதைகள்...




காந்திஜி
நேருஜி
நேதாஜி
இவர்களை  யாரென்று கேட்கிறான்
2ஜி யிலிருந்து
3ஜி அலைபேசிக்கு மாறிய
பாரத புத்திரன்.

==================




நேற்றுவரை
மகிழ்ச்சியோடு
தான் அணிந்த
பூவையும் பொட்டையும்

இன்று
துக்கத்தோடு அவைகளை
தன் கணவனுக்கு வைத்துவிட்டாள் படத்தில்.
விதவை.
=======================



தென்னங்கள்
பனங்கள்
பருகியதில் தெரிந்தது போதை!
உன்
இதழ்கள் சுவைத்ததிலும்
ஏறியது போதை!
ஆனால்
பருகாமல்
சுவைக்காமல்
போதை ஏற்றுவது
படபடவென சிமிட்டும்
உன்
இமைகள் மட்டுமே!

=========
-தனுசு-