சனி, 4 மே, 2013

KASI YATHRA... PART 9, கங்கையில் படகுப் பயணம் (காசி யாத்திரை.... பகுதி 9).

சென்ற பதிவின் தொடர்ச்சி....

மறு நாள் காலை கங்கைக் கரையை அடைந்தோம். அவரவர் பாரம்பரிய உடை உடுத்தி, கங்கையில் நீராடி, ஈர உடையோடு தயாரானார்கள். இந்த உடையை, அன்றைய தினம் வைதீக கர்மாக்கள் முடிந்ததும், மீண்டும் கங்கையில் குளித்து விட்டு தானம் செய்ய வேண்டும். கையில் ஓரிரண்டு துண்டுகள் மட்டும் எடுத்துக் கொண்டோம்.

மோட்டார் படகு வந்தது. அனைவரும் ஏறிக் கொண்டோம். வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டுவோர் முன்புறம் அமர, நாங்கள் படகின் பின்புறம் சென்று விட்டோம்.

படகின் நடுவில், ஒவ்வொரு தம்பதிக்கும் ஒன்று என்ற விகிதத்தில் அடுப்புகள் இருந்தன. சின்ன சைஸ் இரும்பு குமுட்டி அடுப்புகள். சில படகுகளில் சின்ன மண்ணெண்ணை ஸ்டவ்வும் பார்க்க முடிந்தது. அரிசி, பாத்திரம், கரண்டி, விசிறி என எல்லாம் தயாராக இருந்தது. ஏறியதும், பெண்கள் அடுப்பை ஏற்றி, பாத்திரத்தில் கங்கை நீர் எடுத்து அரிசி களைந்து சாதம் வடிக்க ஆயத்தமானார்கள். அவரவரே செய்ய வேண்டும். நான் உதவி செய்யலாமா என்று கேட்டதற்கு கூடாது என்று விட்டார்கள். ஆண்கள், படகின் முகப்பில் அமர்ந்து, சாஸ்திரிகள் கூறியவாறு தர்ப்பணம் முதலியவை செய்யத் துவங்க, படகு கிளம்பியது.

கங்கையில் பயணம் செய்தவாறே(கிட்டத்தட்ட ஒன்றரை, இரண்டு மணி நேரம்) செய்ய வேண்டிய முக்கியக் கர்மா இது. ஒவ்வொரு மனிதனின் முன்னோர்களும், தம் வம்சத்திலிருந்து யாராவது வந்து தம‌க்குப் பிண்டம் அளிக்கிறார்களா என எதிர்பார்த்து கங்கைக் கரையில் காத்திருப்பார்களாம். அவர்களை நல்ல கதி அடையச் செய்ய ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை இது.

ஐந்து ஸ்நான கட்டங்களில் பிண்டம் அளிக்க வேண்டும். மிக அதிக எண்ணிக்கையில் ஸ்நான கட்டங்கள் இருந்தாலும், மிக முக்கியமான ஐந்து கட்டங்களில் மட்டுமே இது நிறைவேற்றப்படுகிறது. ஒவ்வொன்றுக்கு இடையிலும் மிக அதிக தூரம் உண்டு. ஆகவே போட்டில் செல்கிறோம். ஒரு ஸ்நான  கட்டத்தை நெருங்கியதும், வடித்த சாதத்தை எடுத்து தட்டில் போட்டு பெண்கள் உருண்டைகளாக்கித் தர, அதை ஆண்கள் வாங்கி, மந்திர பூர்வமாக கங்கையில் அர்ப்பணம் செய்தார்கள். அடுத்த ஸ்நானக் கட்டம் வருவதற்குள், மறு முறை சாதம் வடித்துத் தயார் நிலையில் வைக்க வேண்டும். இவ்வாறு ஐந்து முறை செய்ய வேண்டும். கொஞ்சம் வேகமாகச் செய்ய முடிந்தால் நல்லது. கூடுமானவரை பேச்சில் ஈடுபடாமல், சாதத்தை அடிபிடிக்க விடாமல் செய்ய வேண்டும். ஒரு படகில் பல தம்பதிகள் இருப்பதால், ஒருவருக்கு நேரமானால் அது மற்ற அனைவரையும் பாதிக்கும். ஆயுளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு இது. இதை வீண் செய்யாமல், பித்ருக்கள் ப்ரீதி அடைந்து நம் தலைமுறை தழைக்க ஆசி கூற வேண்டும் என்ற வேண்டுதலோடு செய்வது நல்லது.

பெரியவர்களெல்லோரும் சிரத்தையாக தம் பித்ருகர்மாவை நிறைவேற்றியபடி இருக்க, நாங்கள் படகின் பின்னிருந்து, கங்கையின் அழகையும், படித்துறைகளையும் பார்த்தபடி வந்தோம். நிஜமாகவே இது ஓர் அற்புத அனுபவம். கரையோரத்தில் இருக்கும் ஆலயங்கள், நீள நீள கம்புகள் நட்டு, அதில் கூடைகளை மாட்டி, பறவைகளுக்கு உணவு வைத்திருக்கும் விதம், பலதரப்பட்ட மக்களின் பிரார்த்தனை வழக்கங்கள் இவற்றைப் பார்த்தபடி பயணித்தோம்.

ஹரிச்சந்திர மகாராஜா காவல் காத்த சுடலை என்பதால் ஹரிச்சந்திர காட்டில் பிணங்கள் எரியூட்டப்படுவது நடக்கிறது. நள்ளிரவில், யோகிகள் பலர் சூழ்ந்து ஜபம் செய்வார்கள் என்றார்கள்.

இப்படி ஒவ்வொரு படித்துறையின் பெயர், அது சார்ந்த விவரங்கள், காசியின் பெருமை முதலியவற்றை எங்கள் கூடவே வந்த ஒருவர் சொல்லிக் கொண்டு வந்தார். குறிப்பாக, மகாபாரதம் தோன்றுவதற்குக் காரணமான நிகழ்வுகளை உள்ளடக்கிய 'அற்புத பாரதம்' குறித்தும் அறிந்து கொள்ளும் நல்வாய்ப்புக் கிடைத்தது.

பித்ரு கர்மாக்கள் நிறைவடையும் நேரம் கொஞ்சம் மந்திரங்கள் அதிகம் இருக்கும். ஆகவே, சாஸ்திரிகள் என்னையும் என் கணவரையும் பார்த்து, 'நீங்க இறங்கி, கங்கையில் குளிச்சுட்டு, பக்கத்தில பிந்து மாதவரை சேவிச்சுட்டு வந்துருங்கோ, அதுக்குள்ள இங்கே எல்லாம் முடிஞ்சுடும்' என்றார்.

'சரி, பக்கத்தில் தானே, சீக்கிரம் போயிட்டு வருவோம்' என்று கிளம்பினோம். அவர் கை காட்டிய இடத்துக்கு அருகே போனதும் அசந்து போனேன். அவ்வளவு உயரமான இடத்தில் தான் பிந்து மாதவர் கொலுவிருக்கிறார். பெரிய பெரிய படிகள். கைப்பிடிகள் உண்டு. ஏறி, திரும்பி, திரும்பவும் படிகள் ஏறினால், மிகப் பெரிய கூடம் ஒன்று இருக்கிறது. பல பக்தர்கள் அங்கே தியானத்திலும் பஜனையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அதைத் தாண்டினால் பிந்து மாதவப் பெருமானின் கருவறை. அழகு கொஞ்சும் திருவுருவம். கீழே சின்னதாக நவநீதக் கிருஷ்ணரும் இருக்கிறார். சிரத்தையாகப் பூஜை செய்கிறார்கள். உள்ளே சென்றதும், மனதை அமைதிப்படுத்தும் விதமான அதிர்வலைகளின் தாக்கத்தை உணர முடிந்தது. பக்தியுடன் வழிபட்டோம்.

சந்தனம், தீர்த்தம் பிரசாதமாகத் தருகிறார்கள். பெற்றுக் கொண்டோம். தக்ஷிணை தந்து, நமஸ்கரித்தோம். பின்னோக்கி நகர்ந்து வெளியே வந்தோம். அருகிலேயே, சிவனாரின் பெரிய லிங்கத் திருமேனி ஒன்றும் இருக்கிறது. பிந்து மாதவர் வழிபட்ட லிங்கம் என்று சொன்னார்கள். ஒரு பெரிய தாராபாத்திரத்திலிருந்து, லிங்கத்தின் மேல் நீர் அபிஷேகித்த வண்ணம் இருந்தது. அருகிலேயே நிறைய மஹரிஷிகள் பிரதிஷ்டித்த லிங்கத் திருமேனிகள். அனைத்தையும் வணங்கினோம். வெளியே வந்து, இறங்கும் முன்பாக, இடப்புறம் திரும்பினால், கொஞ்சம் படிகள் இறங்குகின்றன. அங்கே, மாத்வர்களால் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படும் கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. இது மிகப் பலருக்குத் தெரிவதில்லை. அங்கும் தரிசனம் செய்தோம்.

நாங்கள் தரிசனம் முடிந்து வருவதற்கும் படகு கிளம்புவதற்கும் சரியாக இருந்தது.
.
சாஸ்திரிகளின்  அஸிஸ்டென்ட் பையன் ஒருவன், பாத்திரங்களை எடுத்து, கங்கைக் கரையில் இருந்த வண்டல் மண்ணால் தேய்த்து சுத்தம் செய்தான். தங்கப் பாத்திரம் தோற்கும்!!!. அத்தனை மினுமினுப்பு. 'பேசாம பாக்கெட் பாக்கெட்டா சோப்பும் லிக்விட்டும் வாங்கறதுக்கு, இதை இரண்டு பாக்கெட் எடுத்து போனா என்ன?' என்று தோன்றியது (யாரு விட்டாங்க?).

பெரியவர்கள் கங்கையில் குளித்ததும், மீண்டும் தங்கும் இடம் வந்தோம். ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் ஈர வஸ்திரங்களை (வேட்டி, அங்கவஸ்திரம், புடவை அனைத்தும்) வைத்தோம். உணவுக்கு முன் அவை தானம் செய்யப்பட்டன.

மதியம் கொஞ்சம் ரெஸ்ட். மாலை சப்தரிஷி பூஜைக்கு டிக்கட் வாங்க முன்கூட்டியே கொஞ்சம் பேர் சென்று விட்டனர். நாங்கள் கொஞ்சம் ஷாப்பிங் போகலாம் என்று நினைத்தோம்.

காசியில் அன்னபூரணி விக்கிரகம், காசிப்பட்டு முதலியவை தவிர வேறு சிலவும் பிரசித்தம். வண்ணம் போகாத மரப்பொம்மைகள், குறிப்பாக சின்ன சின்னதாக அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பொம்மை மிருகங்கள் ரொம்பவே அழகு. வாங்கிக் கொலுவில் வைக்கலாம். அதே போல் வளையல்கள். மர வளையல்கள் ரொம்பவும் அருமையாக இருக்கும். அஷ்டகந்தம் எனும் பூஜைப் பொருள் அங்கே ஒரிஜினலாகக் கிடைக்கும்.

பூஜா விக்கிரகங்கள், ஸ்வாமி அலங்காரப் பொருட்கள், ஸ்வாமி சிம்மாசனம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள்  சம்கி, கற்கள் ஒட்டப்பட்ட குங்குமச் சிமிழ் பலவும் நியாயமான விலையில் கிடைக்கும். உதாரணமாக, அங்கு ஒரு குங்குமச் சிமிழ் பத்து ரூபாய் என வாங்கினேன். இங்கே நம்மூரில் விசாரித்த போது ஐம்பது ரூபாய் சொன்னார்கள்.

பிரயாகையில் தோல் பொருட்கள்  விலை கம்மி என்று எங்கள் கூட வந்த பெண்மணி கூறினார். ஆனால் நாங்கள் அங்கு கடைப்பக்கம் போகாததால் தெரியவில்லை.

ஒரு விஷயம் இங்கே சொல்ல வேண்டும். கைடு கூட்டிச் செல்லும் கடைக்குச் சென்றால் அவருக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் சேர்த்து விலை சொல்வார்கள். அதே சமயத்தில் நமக்கு நாலு கடை ஏறி இறங்குவதும் கஷ்டம். சூழலை அனுசரித்து, கைடை விரோதிக்காது, அவரிடம் வழி மட்டும் கேட்டுக் கொண்டு, 'நாங்கள் வசதிப்படும் போது செல்கிறோம்' என்று கூறிவிட்டு, பின்னால் நாமே செல்வது சிறந்தது. பேரம் பேசுவதில் மன்னர்களை விட்டு விலையைத் தீர்மானிக்கச் சொல்வது சாலச் சிறந்தது. ஏனென்றால், நன்றாகப் பேரம் பேசினால் நல்ல விலைக்கு வாங்கலாம்.

சப்த ரிஷி பூஜை சரியாக ஏழு மணி அளவில் ஆரம்பிக்கும். இதற்கு  கொஞ்ச நேரம் முன்பாகவே டிக்கட்டுகள் வாங்கலாம். நிறையக் கூட்டம் இருக்கும். ஆகவே டிக்கட் வாங்கினாலும் முன் கூட்டியே செல்வது நல்லது.

காசியில் நடத்தப்படும் பூஜையில் மிகச் சிறப்பு வாய்ந்த பூஜை இது. காசி விஸ்வநாதருக்கு சப்த ரிஷிகளே வந்து பூஜை செய்வதாக ஐதீகம். ஆகையால் ஏழு பண்டாக்கள் காசி விஸ்வநாதரைச் சுற்றி அமர்ந்து, அனைத்து வித அபிஷேகங்களையும் செய்து, செந்தூரத்தால் ராம நாமம் எழுதிய வில்வதளங்களால் பூஜிப்பார்கள். பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கும். தீப ஆரத்தி நடக்கும் போது  மெய்சிலிர்க்கும்.நாங்கள் சரியான நேரத்தில் சென்று அமர்ந்து பூஜையைத் தரிசித்தோம்.

ஆனால் இங்கு ஒரு நெருடலான விஷயம் சொல்லாமல் விடுவது முறையில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக, ஆன்மீக யாத்திரையைப் பற்றி எழுதும் போது நெகடிவ்வான விஷயங்கள் சொல்வதில்லை. ஆனால் அவ்வாறு செய்வது, அந்தக் கட்டுரையைப் பின்பற்றி யாத்திரை செய்யும் யாத்ரீகனுக்கு வேறு விதமான அனுபவங்களைத் தந்து வருத்தப்படுத்தக் கூடும். ஆகவே சொல்கிறேன்.

இந்த பூஜை பார்க்கச் செல்கிறவர்கள், முதல் வரிசையில் வேகவேகமாக எழுந்து விடும் திறனுள்ளவர்களை அமரச் செய்வது நல்லது. பூஜை முடிந்ததும், சட்டுபுட்டென்று எழுந்து விடுவது உத்தமம். நாங்கள் கொஞ்சம் தாமதித்தோம். ஆகையால், உள்ளே இருந்த பண்டா வெளியில் வந்து விட்டார். என் கணவரின் நெற்றியில் சிந்தூரம் வைத்து, ராம நாமம் எழுதிய வில்வதளங்களில் இரண்டைக் கொடுத்து, 'எடு தக்ஷிணை' என்றார். என்னவர் பர்ஸைத் திறந்து, இருபது ரூபாயை நீட்ட, வாங்கவில்லை. 'நூறு ரூபாய் கொடு, அதுதான் வைத்திருக்கிறாயே' என்றார். சரி, கோவிலில் ப்ரச்னை வேண்டாம் என்று கொடுத்தோம்.

உடனே பின்னாலேயே ஒருவர் வந்து தீர்த்தம் கொடுத்தார். அவரும் தக்ஷிணை கேட்டார். நூறு ரூபாயைத் தவிர வாங்கவில்லை. உடனே அந்த இடம் விட்டு நகர முற்பட்டோம். பின்னாலேயே ஒருவர் ஓடி வந்து வில்வம் தந்தார். 'வாங்கி விட்டோம்' என்றாலும் விடவில்லை. நூறு ரூபாய் வாங்கி விட்டுத் தான் விட்டார். கிட்டத்தட்ட அந்த ஒரு நொடிக்குள் இவ்வாறே சுமார் இரண்டாயிரத்தைத் தாண்டி செலவாகி விட்டது. அப்படியும் ஒருவர் ஓடி வந்து என்னவர் கையில் துண்டைப் போட்டு முறுக்கி 'எடு தக்ஷிணை' என்றார். விடுவித்துக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடாகி விட்டது. 'விஸ்வநாதப் பெருமானே துணை' என்று  வெளியில் ஓடி வந்தோம்.

வேகமாக அறைக்கு வந்து, ஒரு தனிப்பையில் மறுநாள் கயாவிற்குச் செல்லத் தேவைப்படும் பொருட்களைப் பேக் செய்தோம். சாப்பிட்டுவிட்டு, காரில் கயாவிற்குப் புறப்பட்டோம்.....(தொடரும்.)

சிவனருளால்
வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

4 கருத்துகள்:

  1. நான் பல ஆண்டுகளுக்கு முன்பு காசியாத்திரை சென்று வந்துள்ளேன்.

    தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றாகப் பொறுமையாகப் படித்து வருகிறேன்.

    நேரமிருந்தால், காசியாத்திரை சம்பந்தமாக நான் எழுதியுள்ள கதை ஒன்றினை [மங்கையர் மலரில் ”நெடுங்கதை” என்ற தலைப்பில் வெளிவந்தது] படித்துப்பார்த்து கருத்துச்சொல்லுங்கோ.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. தங்கள் பதிவின் இணைப்பைத் தந்தமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. கூடிய விரைவில் படித்து, கருத்திடுகிறேன்.

      நீக்கு
  2. கங்கையில் படகு என்றதும் எனக்கு சத்யவதியின் ஞாபகம் வந்தது...... ம்ம்ம்ம்...... ஆனானப்பட்ட பராசர மகரிஷி எந்த நதியிலே படகில் போனாரோ, தேவ, யக்ஷ, நாக, கந்தர்வ, ராக்ஷச, பைசாச, தானவ, தைத்ய, மனுஷ்ய கணங்கள் எல்லாரும் ஒன்றாக வந்தாலும் அவர்களால் ஜயிக்க முடியாத மஹா வீரர் பீஷ்மர் எந்த நதியின் புத்ரராக ஆவிர்ப்பவித்தாரோ, எந்த நதியில் நீராடிவிட்டு பார்த்தன் காண்டீபத்தொடு தேவேந்த்ரனுடைய தேரில் ஏறி திவ்யாஸ்த்ரங்கள் பெற சுவர்க்கம் சென்றானோ, எந்த கங்கையில் ஸ்ரீ ராமனே படகுச்சவாரி பண்ணினானோ அந்த கங்கையை நீங்கள் ஸ்பர்ஸித்து உள்ளீர்கள். மஹாபாக்யவதியே, வாழ்க, வளர்க :)

    பதிலளிநீக்கு