செவ்வாய், 23 ஏப்ரல், 2013

தனுசுவின் கவிதைகள்.....வினா எழுப்பும் விசிறி!




பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இயற்கை நியதி
இந்த
இயற்கை நியதி
பழயன பரண் மேலும்
புதியன தலை மேலும்
என்று மாறி
உலகின் நியதியானதோ?

உலகம் ஒரு இந்திரபுரி!
அதில்
வசதி வாய்ப்புகள் மோட்சபுரி!

அடுப்பு
அம்மிக்கல்
அரைத்தல்
சமைத்தல்
துவைத்தல்
பயணித்தல்
வாழ்க்கையின் அத்தனையிலும்
ஆயிரம் முன்னேற்றம்!

வளருது விஞ்ஞானம்!
அதில்
விடியும் பொழுதெல்லாம்
தொடுவது நவீனம்!

புதுமை மாற்றம் வந்தது!
அது
பழையதை
புழு போல் பார்க்க வைத்தது!

மின்தடை வந்தது
புழுக்கத்தில்
என் கை
என்னை அறியாமல்
பழைய
பனை விசிறியை எடுத்தது!

அடுத்து கேள்விகள் வந்தது
புதுமை என்பது மாயமா?
நவீனம் என்பது மயக்கமா?
இது
ஏற்றமா?
ஏமாற்றமா?

-தனுசு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக