வெள்ளி, 29 மார்ச், 2013

KASI YATHRA. PART 3, பிரயாகையில் முதல் நாள்...(காசி யாத்திரை...பகுதி 3)

சென்ற பதிவின் தொடர்ச்சி......

அலகாபாத் சென்ற நேரம் அதிகாலை 4 மணி. எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நபர், கிட்டத்தட்ட 19, 20 வயது தானிருக்கும், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எங்களை நாங்கள் தங்க வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்றார். ஒரு வேனில் கிட்டத்தட்ட புளிமூட்டை போல் பதினைந்து பேர் அடைந்து கொண்டு செல்ல வேண்டியிருந்தது.  வழியெங்கும் ஒரே இருட்டு. இருந்த கொஞ்சம் மங்கலான வெளிச்சத்தில், ஊர்  மிகப் பழையதாகத் தோற்றமளித்தது.

சனி, 23 மார்ச், 2013

KASI YATHRA....PART 2, என்னென்ன எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்?(காசி யாத்திரை..பகுதி 2)

முந்தைய பகுதியின்  தொடர்ச்சி....

இராமேஸ்வரம் சென்று வந்த பின் அதிகம் தாமதிக்காமல், காசிக்குப் பயணம் மேற்கொள்வது மிக நல்லது. புறப்படும் முன், வெப்சைட்டுகள் மூலமாகவோ, அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ, காசியில் வசிக்கும் வைதீகர்களிடம் தகுந்த ஏற்பாடுகள் செய்து கொள்வது நல்லது.

காசியில், இது போன்ற யாத்திரீகர்களுக்கு உதவி செய்யவே நிறைய நபர்களும், குழுக்களும் இருக்கிறார்கள். அங்கு போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் சென்றீர்களானால், பண, மனக் குழப்பங்கள் ஏற்பட நிறையவே வாய்ப்பு உண்டு. அமைதியாகச் சென்று திரும்ப வேண்டிய யாத்திரையில் அலைக்கழிப்புகள் தேவையில்லை, இல்லையா?.

நாங்கள் இம்மாதிரி முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து கொண்டு சென்றதால் நிறையவே காப்பாற்றப்பட்டோம். மிக அதிகமாக செலவுகள் இருக்கும் என்று தெரிந்தாலும், முன்கூட்டியே, ஒரு பட்ஜெட் போட்டுக் கொள்ள முடிந்தது.

அங்கிருக்கும் நபர்கள் எல்லாரும் சகட்டு மேனிக்கு பணம் வசூல் செய்வார்கள் என்று சொல்வதும் தவறு. எல்லோருமே அப்படி அல்ல. உதாரணமாக, நாங்கள் ஏற்பாடு செய்து கொண்ட திரு.மகாதேவ சாஸ்திரிகள், 'உங்கள் பட்ஜெட் என்ன?' என்று கேட்டு, அதன்படியே செய்தார். சாதாரணம், மீடியம், ஹை லெவல் என்று மூன்று வித பட்ஜெட் உண்டு. நம்மால் என்ன முடியுமோ அதைத் தெரிவு செய்து கொள்ளலாம். விசிறி தானம் என்று எடுத்துக் கொண்டால், சாதாரண பட்ஜெட்டில், ப்ளாஸ்டிக் விசிறி, மீடியம் பட்ஜெட்டில், நல்ல பனை ஓலை விசிறி, ஹை லெவலில் பெடஸ்டல் ஃபேன் என்று போகும்.

இங்கிருந்தே யாத்திரை ஏற்பாடு செய்யும் ட்ராவல் ஏஜென்ஸி மூலமாக, ஒரு குழுவாகச் செல்கின்ற பட்சத்தில், அவர்களே ஏற்பாடுகள் செய்து தந்துவிடுவார்கள். அதற்கேற்றாற் போல் அவர்களிடம் விவரங்கள் சொல்லி, தங்கும் தினங்களை முடிவு செய்து கொள்வது நல்லது. பிரயாகையில், வேகமாக முடிக்க வேண்டுமானால், ஒருநாள் போதும். நிதானமாக சுற்றிப் பார்க்க வேண்டுமானால், இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும். காசியில், முதல் நாள் சங்கல்ப ஸ்நானம், இரண்டாவது நாள், மோட்டார் படகு மூலமாக, ஐந்து இடங்களில் பிண்டம் அளித்தல், காசியிலிருந்து கயாவுக்குச் சென்று, கயாவில் ஸ்ரார்த்தம் ஒரு நாள், பின் மீண்டும் காசி வந்து, சுமங்கலி பூஜை, கங்கா பூஜை, தம்பதி பூஜை செய்ய ஒருநாள், சுற்றி பார்க்க குறைந்த பட்சம் ஒரு நாள் ஆக மொத்தம் ஆறு தினங்கள் இருக்க வேண்டி இருக்கும்.

பல முறை வட நாட்டுப் பயணம் செய்தவர்களானால் கவலை இல்லை. இல்லாதவர்கள், நிறைய முன் ஜாக்கிரதையோடு தான் பயணம் செய்ய வேண்டும். பணம் முதலானவற்றை, கையோடு எடுத்துச் செல்லாமல், அங்கு போய் ஏடிஎம்மில் எடுத்துக் கொள்வது நல்லது. நகைகள் வேண்டாம். இமிடேஷன் ஆபரணங்கள் எல்லாவற்றிற்கும் நல்லது.  நிறைய கசப்பான சம்பவங்கள் நடக்க வாய்ப்புண்டு. மொழி தெரியாது என்று தெரிந்து விட்டால், அம்புட்டுதான்.

உடைகள் எடுத்துக் கொள்ளும் விஷயத்திலும் நிறையவே கவனம் வேண்டும். நல்ல பெரிய பைகள்/பெட்டிகள் எடுத்துக் கொண்டு, பாதி வரை மட்டுமே ஆடைகள் நிரப்பிக் கொள்ள வேண்டும். பூட்டுப் போடுகிற மாதிரியாக‌  இல்லாமல், லாக் உள்ள பைகள் நல்லது. நிறைய ப்ளாஸ்டிக் பைகள் (ஈரத்துணி வைக்க) தேவைப்படும். கூடுதலாக, ஒன்றிரண்டு பைகள்/ பெட்டிகள் வைத்துக் கொண்டால், வரும் போது, அங்கிருந்து வாங்கி வரும் பொருட்கள் வைக்க உதவியாக இருக்கும்.

கொடிக்கயிறு, க்ளிப்கள், சின்ன சின்ன மஞ்சள் பொடி டப்பாக்கள்(தேய்த்துக் குளிக்க), பல சைஸ்களில் ஜிப் லாக் கவர்கள், சின்ன சைஸ் பக்கெட்(துணி அலச உதவும்), சிறிய அளவிலான முதலுதவி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, பெயின் பாம், ஜூரம் வந்தால் போடுவதற்கு மாத்திரைகள், ஜெலூசில் முதலானவை கட்டாயம். ரெகுலராக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், தேவையான மருந்துகளோடு ப்ரிஸ்கிரிப்ஷனும் கை வசம் வைத்திருப்பது நலம்.

சின்ன சைஸ் டார்ச் லைட், டிஷ்யூ பேப்பர்கள், பழைய நியூஸ் பேப்பர்கள், கட்டாயம் எடுத்துக் கொள்ளவும். டிரெயினிலும், ரூமிலும் அழுக்காக இருப்பின் விரித்து அமர உதவும். சாப்பிடும் போது பேப்பரை விரித்து, அதன் மேல் உணவுப் பொருட்களை வைத்துச் சாப்பிட்டால்  சௌகரியமாக இருக்கும்.


பித்ருகர்மாக்கள் நிறைவேறும் வரை உபவாசம் இருக்க வேண்டும் என்பதால், பசி தாங்குவதற்காக க்ளூகோஸ், ஹார்லிக்ஸ் முதலியவை எடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன டபரா, டம்ளர் முதலியவையும் எடுத்துக் கொள்ளலாம். ப்ளாஸ்க் அவசியம்.

சந்தியாவந்தனம் செய்யும் வழக்கமுள்ளவர்கள், பஞ்ச பாத்திரம் முதலானவை எடுத்துக் கொள்ள வேண்டும். சந்தியாவந்தனம் செய்பவர்கள்  முடித்து விட்டீர்களா என்று அவசியம் கேட்பார்கள். ஆகவே, கவனம். பிரயாகையிலும் காசியிலும்  பஞ்ச பாத்திரம் முதலானவை அவர்களே தருவார்கள். ஆனால் கயாவில் தம்பதிகள் எண்ணிக்கை  மிக அதிகமாக இருக்கும். எனவே, நமக்கென்று தனியாக பஞ்சபாத்திரம், தட்டு ஆகியவை வைத்திருப்பது நல்லது.

பாரம்பரிய உடைகள்(மடிசார், சாதாரண புடவைகள்) முதலானவை மூன்று, நான்கு கட்டாயம் தேவைப்படும். எளிதில் உலருகிற மாதிரியான, பெல்காம், சிந்தடிக் புடவைகள் நல்லது. வேட்டிகளோடு, அங்கவஸ்திரங்கள் ஒன்றரண்டு கூடுதலாக தேவைப்படும். குளிர் காலமானால், ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் இவை அவசியம்.

தானம் செய்வதற்கும், கயாவில் வைதீகர்களுக்குத் தருவதற்கும் புது வேட்டிகள் நாமே எடுத்துச் செல்வது நல்லது. நாங்கள் இங்கிருந்து தான் வாங்கிச் சென்றோம். ஆறு வேட்டி செட் தேவைப்பட்டது. அது போல், பத்து பதினைந்து ப்ளவுஸ் பிட்டுகள், சீப்பு கண்ணாடி, மஞ்சள் குங்குமம் போட்ட பாக்கெட்டுகளும் கைவசம் வைத்திருந்தோம். நிறைய இடங்களில் தேவைப்பட்டன. அது போல், காசியில், தம்பதி பூஜை செய்ய, புடவை, வேட்டி, ஒரு கிராமில் திருமாங்கல்யம், வெள்ளி மெட்டி முதலானவையும் வாங்கிச் செல்வது நல்லது. இதையெல்லாம் நாமே எடுத்து வருவதாக, நமக்கு யாத்திரை ஏற்பாடு செய்யும் நபரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது.

முன்கூட்டியே, ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டு,அதன் படி பொருட்கள் எடுத்து வைத்துக் கொண்டால் திரும்ப வரும் போது சரிபார்க்க உதவியாக இருக்கும்.

தனிப்பட்ட முறையில் பிரயாணம் செய்வதானால், டிக்கெட்டுகளோடு, ஐடி ப்ரூஃப்களும் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். ஹேண்ட் பேக்குகளில் அதிகம் பொருள் வைக்காமல், இடுப்பில் கட்டிக் கொண்டு செல்லுகிற டைப் பவுச்களில் பணம், காமிரா முதலியவை வைப்பது உத்தமம்.

காசி, கயா தவிர வேறு இடங்களும் சுற்றிப் பார்க்கிற ப்ளான் இருக்கிற பட்சத்தில் அதற்குத் தகுந்தாற் போல் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நாங்கள் அயோத்தி, நைமிசாரண்யம், சித்ரகூடம் எல்லாம் சென்று வந்தோம்.

புறப்படுகிற தினத்தில், வீட்டிலேயே, கணபதி பூஜை, யாத்ரா தானம் முதலானவை செய்து விட்டு, குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு புறப்படவேண்டும். இயலவில்லை என்றால், வீட்டுப் பூஜை அறையில் பிரார்த்தனை செய்து கொண்டு புறப்படலாம்.

எங்கள் காசி யாத்திரை, சென்னையிலிருந்து துவங்கியது. தெருமுனைப் பிள்ளையார் கோவிலில் சிதறுகாய் போட்டு விட்டு, வண்டி ஏறினோம். மாலை 5.30 மணி அளவில் ட்ரெயின் ஏறி, அன்று இரவு மற்றும் அடுத்த இரு நாட்கள் பிரயாணம் செய்து, மூன்றாம் நாள் அதிகாலை 4.30 மணிக்கு அலகாபாத் சென்றடைந்தோம்...... (தொடரும்....)

சிவனருளால்

வெற்றி பெறுவோம்!!!

செவ்வாய், 19 மார்ச், 2013

தனுசுவின் கவிதைகள்....தலைமை இனம்! (ஆங் சான் சு கி)


போற்றிப்பாட ஒரு கவி போதுமா?
இந்த 
மண்ணினம் வணங்கும் 
பெண்ணிவளைப் போற்றிப்பாட 
இந்த 
ஒரு கவிதை போதுமா? 


பெண்ணும் பெண்ணின் மனம் சார்ந்த இடமும்
ஐந்திணைக்கு அடுத்து ஆறாம் திணை!
மற்ற 
ஐந்திணையும் கண்டு மலைக்கும்
இவளின் 
தினவெடுத்த மனதினை! .


பொறுப்பாள் 
புழுவென எண்ண‌ வேண்டாம்!
பொங்கி எழுந்தால் 
பூகம்பம் மறக்க வேண்டாம்!


அவளின்
அந்த மனமே கனிவு தரும் அருமருந்து!
அதே நேரம்
அவள் இனத்தின் கண்ணில் நீர் கசிந்தால்
அவளே
வெடிக்கும் வெடி மருந்து!


நாணயம் போன்று இவளுக்கும்
ஒரு பக்கம் பூ போன்றது நாண‌ம்!
மறுபக்கமோ 
அது 
போர் வெல்லும் அரசாளும் தலை எனும் ஞானம்!


இவளின் 
ஓர் தீர்மானம் 
பூமியின் வட்டப்பாதையை மாற்றும்!
இவளின்
ஓர் முடிவு 
அஹிம்சை போர் வெல்வதில்
அந்த மஹாத்மாவையே 
பின்னுக்குத் தள்ளி முதலிடம் ஏற்றும்!


உயிர் கொண்டு பிறந்ததெல்லாம்
உயிர் என்று சொன்னால்
உயிர் கொடுக்கும் 
இந்த உயிரை என்னவென்று சொல்ல?

பெண்ணடிமை காலம் முடிந்து
இனி
பெண்ணுக்குஅடிமை இந்தக் காலம் 
என்பதின் விதையாகி 
வெடித்து செடியாகி 
முளைத்து மரமாகி நிற்கும் 
இந்த 
வீரமகளை போற்றிப்பாட 
இந்த 
ஒரு கவிஞன் போதுமா?
இந்த 
ஒரு கவிதை போதுமா

-தனுசு-

செவ்வாய், 12 மார்ச், 2013

KASI YATHRA. PART 1....முதலில் இராமேஸ்வரம்...(காசி யாத்திரை.....பகுதி 1)


இந்து தர்மத்தில், ஒருவரின் வாழ்நாள் கடமைகளுள் ஒன்றாக மதிக்கப்படுவது காசியாத்திரை. காசி யாத்திரை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்றும், கங்கா ஸ்நானம் புண்ணிய வசத்தாலேயே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இறைகருணையால், காசியாத்திரை செய்யும் ந‌ல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.

அது தொடர்பான அனுபவங்களை, தெய்வீகமாக மட்டுமல்லாது லௌகீகமாகவும் உங்களோடு பகிர விரும்புகிறேன். இதை  முதலிலேயே சொல்வது நல்லது என்று தோன்றியது. ஏனென்றால், காசியாத்திரை போய் வந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். அதில் எவ்விதமான அனுபவங்கள் ஏற்படும் என்று அறிந்துமிருப்பார்கள்.  காசியாத்திரையைப் பற்றிய தெய்வீகப் பதிவுகள் பலவும் இருக்கின்றன. ஆகவே, இனி காசி யாத்திரை செய்ய விரும்புவோருக்கு கிட்டத்தட்ட ஒரு கைடு போல, எல்லாவித அனுபவங்களும் கலந்ததாக இக்கட்டுரை வர வேண்டுமென நினைக்கிறேன்.

முறையான கிரமமான காசியாத்திரை செய்ய வேண்டுமெனில், இராமேசுவரம், அலகாபாத்(பிரயாகை), காசி, கயா மீண்டும் இராமேசுவரம் என்று முடிப்பது இப்போது வழக்கத்தில் இருக்கிறது. மிக முற்காலத்தில், இராமேசுவரம், அலகாபாத், காசி, கயா, மீண்டும் காசி, அலகாபாத் இராமேசுவரம் என்று முடிப்பது வழக்கமாம்.

இதன் தெய்வீகக் காரணங்கள் பலவும் இருந்தாலும், முற்காலத்தில் நம் முன்னோர்கள், பாரத தேசத்தின் ஒற்றுமைக்கென்றே இவ்விதமான கிரமத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று தோன்றியது. வடக்கு, தெற்கு இணைப்பு தெய்வீகத்தால் தான் சாத்தியப்படும் என்று வார்த்தையால் சொல்லாமல் சாஸ்திர விதியாக செய்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பொதுவாக, காசியாத்திரை, தெய்வ தரிசனத்திற்காக மட்டுமல்லாது, நம்மை இந்த மண்ணில் உருவாக்கி, உயிர்கொடுத்து, அன்பையும் அன்னத்தையும் சேர்த்து ஊட்டி, பசி நோக்காமல் கண் துஞ்சாமல் நம்மை வளர்த்தெடுத்து ஆளாக்கிய பெற்றோர்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவர்களையும் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த முன்னோர்களையும் பிறவிப்பெருங்கடலில் இருந்து கரையேற்றுவதற்காகவுமே முக்கியமாகச் செய்யப்படுகிறது.

காசியாத்திரை என்பது தெய்வசங்கல்பத்தாலேயே கிடைக்கும் என்பதால், யாத்திரை செய்வதென்று தீர்மானித்த உடனே, யாத்திரை நல்ல விதமாக நிறைவேற வேண்டுமென குலதெய்வத்திற்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைப்பது வழக்கம். ஒவ்வொரு நிலையிலும் தடங்கல் பல வரும். அதை மீறி யாத்திரையை நல்லவிதமாக நிறைவு செய்வது ஈசன் செயலன்றி வேறெதுவும் இல்லை.

பொதுவாக, பிள்ளை இருக்கிறவர்கள், பிள்ளையுடனேயே காசியாத்திரை செய்ய வேண்டுமென விதி இருக்கிறது. காசி என்பது கர்ம பூமி. மிக முற்காலத்தில் காசியாத்திரை சென்றவர்கள் திரும்புவதே அபூர்வம் என்பார்கள். ஆகவே பிள்ளையும் உடன் செல்ல வேண்டும். லௌகீகமாகப் பார்த்தால், பெரும்பாலும் வயதானவர்களே காசிக்குச் செல்கிறார்கள். அவர்களை அழைத்துச் செல்ல, படிகளில், படகுகளில் ஏற்றி இறக்க உதவியாக‌ பிள்ளையும் உடன் செல்வது நல்லதல்லவா?.

இந்த விதிப்படியே, நானும் என் கணவரும் என் மாமனார் மாமியாருடன் காசி சென்றோம். பொதுவாக, யாராவது காசி யாத்திரை செல்வதானால், அவரது குழந்தைகள், உற்றார் உறவினர்கள், அவர்களை, பயணத்திற்கு முன்பாகச் சந்தித்து ஆசி பெறுதல் அவசியம். யாத்திரை நிறைவு செய்த பின்னும் கண்டிப்பாக, ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பெண் ம‌க்கள், தாய் தந்தையருக்கு, தாம்பூலம் தந்து, யாத்திரைப் பணம்(இதை காசியில் உண்டியலில் சேர்ப்பார்கள்) தர வேண்டும். இது பெரும் புண்ணியம் என்று கூறப்படுகிறது.
முதல் கட்டமாக,  இராமேஸ்வர யாத்திரை செய்ய வேண்டும். வீட்டில், இறைவனை வேண்டிக்கொண்டு புறப்பட்டு இராமேஸ்வரம் போய், தனுஷ்கோடியில், சங்கல்ப ஸ்நானம் செய்ய வேண்டும். தெரிந்த வைதீகர்களை துணை கொள்வது மிக முக்கியம். இல்லையென்றால் பட்ஜெட் படுத்தி விடும். இதை, முறையாக, கிரமமாகத் தெரிந்து செய்பவர்களை விசாரித்து ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்த உடன், காசி யாத்திரை சங்கல்பம் செய்வார்கள். மணலினால் சேது மாதவர், பிந்து மாதவர், வேணி மாதவர் என்று மூன்று லிங்கங்கள் பிடித்து பூஜை செய்ய வேண்டும்.  மூன்று லிங்கங்களில், சேதுமாதவரை, சேதுக் கரையிலேயே கரைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். பிந்து மாதவரை, நமக்குச் செய்து வைத்த வைதீகர் தானம் பெற்றுக் கொள்வார். வேணி மாதவரை, பத்திரமாக ஒரு டப்பாவில் வைத்து வாங்கி வர வேண்டும். இதுவே பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட வேண்டியது.

வேணிமாதவரை ஒரு கவரில் போட்டு வாங்கி வருவதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டிலிருந்தே தகுந்த டப்பாவைக் கொண்டு செல்வது அவசியம். ஏனெனில் அதில், வேணி மாதவரை பிராணப் பிரதிஷ்டை செய்து வாங்கி வருகிறோம். கவரிலிருந்து அது சிதறிவிடக்கூடாது.

அதை வீட்டுக்கொண்டு வந்ததும் பூஜை அறை/அலமாரியில் வைத்து, காசி யாத்திரை செல்லும் வரை அந்த டப்பாவிற்கு பூ வைத்து, இயன்றதை தினம் நிவேதனம் செய்ய வேண்டும். காசி யாத்திரை செல்லும் தினத்தில், மறக்காமல் அதை எடுத்து வைத்துக்  கொள்ள வேண்டும். பிரயாகையில் வேணி தானத்திற்கு முன் சங்கல்பம் செய்யும் போது அதை தவறாமல் கேட்பார்கள். மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, அதை 'மண்' என்று சொல்லாமல், வேணி மாதவர் என்றே சொல்லிப் பழக வேண்டும். பிரயாகையில் ஒரு பாட்டி, 'இராமேஸ்வரத்திலிருந்து மண் எடுத்து வந்தோமே, அந்த டப்பாவ எடு ' என்று உரக்கச் சொல்லி அங்கிருந்த வைதீகரிடம் சரியாக 'வாங்கி'க் கொண்டார்.

இராமேஸ்வர யாத்திரை செய்து முடிக்க, சுமாராக ஒரு தம்பதிக்கு ரூ.6000லிருந்து  எட்டாயிரம் வரை (இராமேஸ்வரத்தில் தங்கும் செலவு, தனுஷ்கோடி போய்வரும் செலவு, வைதீகச் செலவு எல்லாம் சேர்த்து) ஆகும். உணவு, நம் இருப்பிடத்திலிருந்து போய்வரும் செலவு தனி. முதல் நாள் மாலையிலேயே இராமேஸ்வரம் சென்று தங்கிக் கொண்டால், மறு நாள்  காலையில், தனுஷ்கோடி சென்று விடலாம். மதியத்துக்குள் எல்லாம் நிறைவடைந்து விடும். ஸ்வாமி தரிசனம் முடிந்து இரவு புறப்பட்டு விடலாம். (தொடரும்....)

சிவனருளால்,

வெற்றி பெறுவோம்!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.